ஜாதி மதங்களைப் பாரோம் - உயர் ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே - அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே - பாரதி
கேட்டதில் பிடித்தது
நமது வீடுகளில் இருக்கும் குழந்தைகளின் சேட்டைகளை பற்றி எவ்வளவு பெருமையாக சொல்லிக் கொள்வோம். குட்டிச் சாத்தான்கள், வாலுகள் என்று அடைமொழியிட்டு அழைப்பதிலும், பிறரிடத்தில் அதைப் பறைசாற்றிக் கொள்வதிலும் ஒரு பெருமை.
குழந்தை பிறந்ததிலிருந்து ஒவ்வொரு அசைவிற்க்கும் ஒரு அர்த்தம் சொல்லி, குழந்தை ரொம்ப சூட்டிகை இல்ல என்று சொல்லிக் கொள்வதில், வீட்டிலுள்ள பெரிசுகளுக்கு அலாதி ஆனந்தம். குழந்தைகள் நடக்க ஆரம்பித்து விட்டால் போதும் அவ்வளவுதான், அவர்களின் ஒட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. ஒரு பொம்மையை, ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் உடையாமல் வைத்திருந்தால் பெரிய அதிசயம்.
இலவச கலர் டி.வி என்னும் கொடுமை
மேற்க்கண்ட செய்தி சில மாதங்களுக்கு முன் எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்தது. அடுத்து, ஐந்தாம் கட்டமாக மேலும் 40 லட்சம் இலவச கலர் டி.வி. 17 நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையிலான சட்டமன்றக் கட்சிகளின் பிரநிதிகள் குழு கூட்டம் என்று நேற்று எல்லா நாளிதழ்களும் செய்தி வெளியிட்டன.
இந்த செய்தியினைப் படித்து விட்டு, வரி செலுத்துவோர் மட்டுமல்லாது நாட்டின் மீது அக்கறைக் கொண்ட அனைவருக்கும் ரத்தம் கொதித்திருக்கும்.
நாட்காட்டி
தற்போது, உலகில் எல்லா மக்களும், அரசுகளும் பயன்படுத்துவது ஆங்கில நாட்காட்டி எனப்படும் கிரிகோரியன் நாட்காட்டியைத்தான் என்றாலும், நாடுகளுக்கென்று தனித்தனியாக அதிகாரப் பூர்வ நாட்காட்டி உள்ளது. இந்தியாவின் தேசிய நாட்காட்டி "இந்து நாட்காட்டி" (விளக்கம் பின்பு வரும்).
படித்ததில் பிடித்தது - பிரார்த்தனை
அனன்யாவும் கிரிஷும்
தலைப்பைப் பார்த்துவிட்டு நாடோடிகள் நாயகி அனன்யாவுக்கும், ஹிரித்திக் ரோஷனுக்கும் ஏதோ கசமுசா சமாச்சாரம் என்று நீங்கள் வந்தால் இந்த பதிவு உங்களுக்கானது அல்ல.
சேத்தன் பகத் எழுதியுள்ள நான்காவது நாவலான "2 States”-ல் வரும் கதாநாயகிதான் அனன்யா. கதாநாயகன்தான் கிரிஷ்.
யாருங்க இந்த "சேத்தன் பகத்" என்று கேட்பவரா நீங்கள். அவரை பற்றி தெரிந்து கொள்ள கிருத்திகா எழுதியுள்ள சேத்தன் பகத்-புத்தக அறிமுகங்கள் என்ற பதிவைப் பார்க்கவும்.
சரி நாம் விடயத்திற்க்கு வருவோம்.
நம்ம மயிலாப்பூர் மாமி அனன்யா சுவாமிநாதனுக்கும், பஞ்சாப் சிங் கிரிஷ் மல்கோத்ராவுக்கும் இடையே நடக்கும் காதல் கதை தான் "2 States".
இதைத் தான் நாங்கள் "அபியும் நானும்" படத்தில் பார்த்து விட்டோமே என்று சொல்லாதீர்கள். அது வேறு இது வேறு.
இந்தியாவின் இரு வேறு கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் கொண்ட இருவருக்கும் இடையே இருக்கும் காதலை அவர்கள் குடும்பத்தினர் எப்படி அணுகுகிறார்கள் என்பதை நகைச்சுவையோடு விளக்கியிருக்கிறார். எனக்கு என்னவோ சொந்த கதையை நாவலாக்கியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. ஏனென்றால் சேத்தன் பகத் வட இந்தியாவைச் சேர்ந்தவர். அவரது மனைவி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்.
இனி கதை சுருக்கம் :
வட இந்தியாவைச் சேர்ந்த கிரிஷும், சென்னை மயிலாப்பூர் அனன்யாவும் அகமதாபாத் IIM-ல் சந்திக்கிறார்கள். இருவருக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. கசமுசாவும் நடந்து விடுகிறது. இரு குடும்பத்தினரும் எதிர்க்கிறார்கள் (வழக்கம் போல). காதலர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் என்று முடிவு செய்கிறார்கள். (அட நம்ம ஜோடி, மின்சாரக் கண்ணா கதை). எப்படி குடும்பத்தினரின் சம்மதத்தைப் பெறுகிறார்கள், இரு துருவம் போன்ற கலாச்சாரம் கொண்ட குடும்பங்களை ஒன்று சேர்க்கிறார்கள் என்பதே கதை.இந்தியாவில் திருமணம் என்பது இரு தம்பதிகளின் இணைப்பு அல்ல. இரு குடும்பங்களின் இணைப்பு என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார். "இந்தியக் காதல் என்பது காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதல்ல" என்று வைர முத்துவின் கவிதையில் வரும்.அதை மிகுந்த நகைச்சுவையோடு விளக்கிச் சொல்லியிருக்கிறார்.
முதல் 50 பக்கங்களில் காதல் மட்டுமே வரும் கதையில், இரு குடும்பங்களும் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சந்திக்கும் போது வேகம் பிடிக்கிறது. ஒரு திருமணத்திற்க்கு மாப்பிள்ளை வீட்டார் தான், பெண் கேட்க வேண்டும் போன்ற தமிழ் மரபுகளை நக்கலடித்தார் போல் இருக்கிறது. இயல்பான சேத்தன் பகத்தின் ஆங்கிலம், அவரது நகைச்சுவை மிகுந்த எழுத்து நடை ஆகியவை ரசிக்க வைக்கிறது. ஆனால் இயல்பான நகைச்சுவை என்பதற்க்காக, கதா நாயகன் பேசும் ஆபாச வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.
நீங்கள் நிறைய தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படம் பார்ப்பவரானால், கதையில் வரும் திருப்பங்களை இலகுவாக ஊகிக்கலாம் ("எத்தனை தமிழ்ப் படம் பார்த்திருக்கென்" என்று கமல் மாதிரி காலரை தூக்கி விட்டுக்கலாம்)
ஆக மொத்தத்தில் ஒரு முறை படிக்கக் கூடிய, இளைஞர்களுக்கேற்ற நகைச்சுவைப் புத்தகம். படிச்சுத் தான் பாருங்களேன் (எவ்வளவோ பண்றீங்க, இதையும் பண்ணுங்களேன்!)
பி.கு: பிடிச்சிருந்தா ஓட்டு போட்டுட்டு போங்க! பிடிக்கலைன்ன திட்டித் தீர்த்துடுங்க, ஆட்டோ மட்டும் அனுப்பிடாதீங்க!
கோபன்ஹெகன்
கடந்த சில நாட்களாக "கோபன்ஹெகன்" என்பதை பற்றி ஊடகங்கள் பரபரப்பாக பேசி வருகின்றன. ஆங்காங்கெ விளம்பரங்கள், நாடளுமன்றத்திலும் அது பற்றித்தான் பேச்சு. அது என்ன "கோபன்ஹெகன்"? புதிதாக வந்திருக்கும் கைபேசி நிறுவனமா? இல்லை "ஸ்பெக்ட்ரெம்" மாதிரி ஏதேனும் ஊழல் சமாச்சாரமா? என்று கேட்காதீர்கள்.
கோபன்ஹெகன், டென்மார்க் நாட்டின் தலைநகரம். புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாடு இன்று (டிசம்பர் 7), இங்குதான் தொடங்குகிறது. 192 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், குறிப்பாக 60 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இதில் பங்கு பெறுகிறார்கள். டிசம்பர் 18ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டில் உலக அளவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்பர். மாநாட்டின் இறுதி 2 நாட்களில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மன்மோகன்சிங், பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன், சீன அதிபர் வென்ஜியாபோ உள்பட பலர் பங்கேற்று பேசுகின்றனர்.
ஏன் கோபன்ஹெகன் நகரத்தில் இந்த மாநாட்டை நடத்துகிறார்கள் என்பதற்க்கு சுவையான வரலாறு உள்ளது. 1000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த கோபன்ஹெகன் நகரம், 15ம் நூற்றாண்டு முதல் டென்மார்க் நாட்டின் தலைநகரமாக திகழ்கிறது. பல ஆண்டுகளாக மக்கள் வாழ்வதற்க்கேற்ற நகரங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு Monacle என்ற சர்வதேச மக்கள் வாழ்க்கைமுறை இதழ், சிறந்த 25 வாழ்வதேற்க்கேற்ற நகரங்களில் முதன்மையான நகரமாக கோபன்ஹெகன்னை அறிவித்துள்ளது.
இதைவிட முக்கியமானது சுற்றுச்சூழலில் சிறந்த நகரமாக கோபன்ஹெகன் விளங்குகிறது. 36 சதவிகிதம் மக்கள் மிதிவண்டியையே பயன்படுத்துகின்றனர். ஐரோப்பாவிலேயே மிகவும் சுத்தமான நகரமாக சுற்றுலாப் பயணிகள் வாக்களித்துள்ளனர்.
கோபன்ஹெகன் மாநாட்டின் முதல்நாள் ஒளிப்பரப்பப் பட்ட "தயவு செய்து உதவுங்கள் உலகுக்கு" (Please help the world) என்ற காணொளியை கீழே இணைத்துள்ளென்.
எரிபொருளில் இருந்து வெளியேறும் நச்சுக்காற்றின் ( கிரீன் எமிசன்) அளவை குறைப்பது, புவி வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்துவது, பருவ நிலை மாற்றங்களால் ஏற்படப் போகும் விளைவுகள் போன்ற முக்கியப் பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப் படுகின்றன. இதற்குப் போய் இடது சாரிக் கட்சிகள் ஏன் "அணு ஆயுத உடன்படிக்கை" போல சண்டை போடுகிறார்கள்? இதனால் இந்தியாவுக்கு என்னப் பிரச்சனை என்கிறீர்களா?
உலக நாடுகள் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க முன் வரவேண்டும் என்ற சட்டதிட்டம்தான். இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, பிரெசில் போன்ற நாடுகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. இவர்களால் தான் புவி வெப்பமடைகிறது என்பது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் குற்றச்சாட்டு. 200 ஆண்டுகளாக பணக்கார நாடுகள் எல்லாவற்றையும் அனுபவித்து, நச்சுக்காற்றை பரப்பிவிட்டார்கள். இப்போது அவர்களுக்கும் எங்களுக்கும் ஒரே சட்டமா? என்பது இந்தியாவின் குற்றச் சாட்டு.
இது பற்றிப் பேசிய மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், "இந்தியா ஏற்கனவே கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை 17 சதவீத புகை மாசைக் குறைத்துள்ளது. 2005-ம் ஆண்டு அளவிலிருந்து, அடுத்த 11 ஆண்டுகளுக்குள் (2020க்குள்) 20 முதல் 25 சதவீத அளவுக்கு புகை மாசு குறைக்கப்படும். அதேசமயத்தில், இதை சர்வதேச சட்டங்களின் மூலமாக இந்தியாவின் மீது திணிக்க முடியாது. இந்தியாவே விரும்பி இதை செய்கிறது. இதில் இந்தியாவின் மீது நிர்ப்பந்தங்களை ஏற்க முடியாது." என்கிறார்.
பருவ நிலை மாற்றத்தால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படக் கூடிய நாடுகளில் ஒன்று. காரணம், பெரும்பாலான மாநிலங்கள் பருவ மழைகளை நம்பி உள்ளது. இமயமலைப் பனிச் சிகரங்கள் உருகத் தொடங்கியுள்ளன, ஜார்க்கண்ட், ஒரிசா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் காடுகள் முழுமையாக அழியும் அபாயம் உள்ளது. உண்மையில், இந்தியாவுக்கு இதனால் என்ன பாதிப்பு என்பது குறித்து தகவலே இல்லை. இது மிகவும் வேதனையான விஷயம். மேற்கத்திய நாடுகளிடமிருந்து புவிவெப்ப மாற்றம் குறித்து நமக்கு கிடைக்கும் தகவல்களில் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்ற தகவல் இடம் பெறுவதில்லை. எனவே நமது விஞ்ஞானிகள் மூலம் விரிவான அறிவியல் ஆய்வை மேற்கொண்டு நமது பாதிப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம் என்று கூறுகிறார் அமைச்சர்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் உடன்படிக்கைகளின் படி அனைத்து நாடுகளும் மாசுக் கட்டுப்பாட்டு நடவடக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வன வளங்களை மேம்படுத்த வேண்டும்.
அரசுகள் செய்வது இருக்கட்டும். பொதுமக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன
1. மின்சாரத்தை சேமிக்க வேண்டும். இதனால் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதை கட்டுப் படுத்த முடியும்.
2. நெகிழ்வு பைகள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும்.
3. நமது வாகனங்களில் மூலம் புகை மாசு ஏற்படுத்துவதை நிறுத்தவேண்டும்.
4. குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
5. மரம் வளர்த்தலில் ஈடுபட வேண்டும்.
2012, Day After Tomorrow போன்ற ஆங்கிலத் திரைப்படங்கள் பார்த்தவர்களுக்கு இம்மாதிரியான மாநாடு எவ்வளவு அவசியம் என்பது புரியும். மிகப் பெரிய ஆபத்தை எதிர் நோக்கியுள்ளோம். பருவ நிலை மாற்றத்தைத் தடுக்கும் முயற்சிகளில் நாமும் ஈடுபட வேண்டியுள்ளது அவசியம்.
பி.கு: பிடிச்சிருந்தா ஓட்டு போட்டுட்டு போங்க! பிடிக்கலைனாலும் ஓட்டு போட்டுட்டு போங்க! தமிழ் மணத்திலும், Tamilish-லும்
ஆரவாரமில்லாமல், அழகான வெற்றி
Celebrations were restrained - "subdued" - 1952-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முதல் வெற்றி குறித்து, கிரிக்கெட்டின் பைபிளான "விஸ்டன்" இதழ் இப்படித்தான் வர்ணித்தது. அதே வர்ணனையைத்தான் சென்ற வாரம் 100வது வெற்றியின் போதும் கூறியிருக்கிறது.
57 ஆண்டுகள், 432 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு நூறாவது வெற்றி பெறும் ஆறாவது அணி. ஆஸ்திரேலியா (199 போட்டிகளில்), இங்கிலாந்து (241), மேற்க்கிந்தியத் தீவுகள் (266), தென்னாப்பிரிக்கா (310), பாகிஸ்தான் (320) ஆகிய அணிகள் முன்பே பட்டியலில் நூறு வெற்றிகளை ருசித்து விட்டன.
மிக மெதுவாகத் தான் 100-வது வெற்றியை பெற்று இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வெற்றி விகிதம் அதிகம். பங்கேற்ற 102 போட்டிகளில், 39-ல் வெற்றி பெற்று, 36 சதவிகித வெற்றி விகிதத்தை கண்டுள்ளது. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகமாகும். 2000-ஆம் ஆண்டுக்கு முன் பங்கேற்ற 330 போட்டிகளில் 61ல் மட்டுமே (வெற்றி விகிதம் 18.48%) வெற்றி பெற்றுள்ளது. இந்த நூற்றாண்டில் முதல் முறையாக தோல்வி விகிதத்தை (1.44%) காட்டிலும் வெற்றி விகிதம் அதிகரித்துள்ளது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் விஜய் காசேரே தலைமையிலான இந்திய அணி, டொனால்டு கார் தலைமையிலான இங்கிலாந்து அணியை வென்று முதல் முறையாக தொடரை சமன் செய்தது. அதற்குப் பிறகு முதல் முறையாக தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
இந்தியா போன்ற ஒரு நாட்டில், ஒருங்கிணைந்த அணியை உருவாக்குவது என்பது எளிதல்ல என்பது அனைவரும் அறிந்ததே! பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட வீரர்கள் இணைந்து விளையாடி வெற்றி பெற்றிருக்கிறார்கள். இனமான உணர்வு கொண்டு பிரித்தாட வேண்டும் என்று நான் குறிப்பிட வில்லை. "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நமது தத்துவம் மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றிருக்கிறது.
முதல் இடத்தைப் பிடிக்க, கடந்த பத்தாண்டுகளில் அணியை திறம்பட நிர்வகித்த கேப்டன்களை பாராட்டியே ஆக வேண்டும். நீண்ட இடைவேளைக்குப் பின்னர், செளரவ் கங்குலி தலைமையில் தான், அணி ஒருங்கிணைந்து செயல்பட்டு பல வெற்றிகளை குவித்தது. அவரது வழியில், ராகுல் திராவிட்டும், கும்ளேவும் சிறப்பாக வழி நடத்தி அணியை பலப்படுத்தினார்கள். வந்தார் தோனி! என்ன மாயமோ தெரியவில்லை. இவர் தொட்டதெல்லாம் வெற்றியாகிறது. 20 ஓவர் உலகக் கோப்பை வெற்றிக்கு பின்னர், ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றியை குவித்தவர், இது வரை டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைக் கண்டதில்லை. இவரது தலைமையில் இந்திய அணி 10 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்று சாதனைகளை படைத்து வருகிறது.
1933-ல் முதல் முதலாக மும்பையில் உள்ள பான்பரா மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி, தந்து 101-வது போட்டியிலும் அதே மைதானத்தில் வெற்றி பெற்று, உலகின் முதன்மை அணியாக வாகை சூடியிருக்கிறது.
ஒரு சிறந்த அணியில் விளையாடியிருப்பதாக சச்சின் பெருமிதமடைகிறார். "ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. அனைத்து வீரர்களும், இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள், பேட்டிங், பௌலிங், பீல்டிங் என எல்லா துறையிலும் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள்." என்று புகழாரம் சூட்டுகிறார் கவாஸ்கர்.
அடுத்த ஆறு மாதங்களில், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கவிருக்கும் இந்திய அணி முதல் இடத்தை தக்க வைப்பது கடினமே! இருப்பினும் பணபலத்தில் மட்டுமல்ல, விளையாட்டிலும் நாங்கள் முதன்மையானவர்கள் என்று நிருபித்திருக்கும் வீரர்களை வாழ்த்துவோம்!
பி.கு: பிடிச்சிருந்தா ஓட்டு போட்டுட்டு போங்க! பிடிக்கலைனாலும் ஓட்டு போட்டுட்டு போங்க! தமிழ் மணத்திலும், Tamilish-லும்