Pages

மும்பை & அசாம்

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை, 10 சூலை, உத்திரப்பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் நடந்த இருவேறு இரயில் விபத்துகளில் சுமார் 82 உயிர்கள் போய்விட்டன. 250-க்கும் மேற்பட்டோர் படு காயங்களுடன், உயிருக்குப் போராடி கொண்டிருந்தனர். இதில், உ.பி விபத்து மனித தவறினால் நடந்திருக்கலாம் எனவும், அசாம் விபத்து, தண்டவாளங்கள் குண்டு வைத்து தகர்க்கப் பட்டதால் நடைபெற்றது எனவும் முதல் தகவல் அறிக்கை சொல்கிறது. கடந்த 2010 ஏப்ரல் முதல் நடந்த ரயில் விபத்துக்களில் இது வரை 336 பேர் இறந்து விட்டனர். 436 பேர் படுகாயம் அடைந்ததாக புள்ளிவிபரங்கள் சொல்கிறது.

அசாம் மாநிலத்தில் நடைபெற்றது, விபத்தல்ல. திட்டமிட்ட வெடிகுண்டு தாக்குதல். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கோ, இதுவரை நடந்த ரயில் விபத்துகளுக்கோ ஆளும் அரசுகளும் சரி, இந்திய ஊடகங்களும் சரி. பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மங்குனி பிரதமர், ரயில்வே இணையமைச்சரை, விபத்து நடந்த இடத்திற்க்கு போய்ப் பாருங்கள் என்று சொல்வாராம். அதற்கு இரயில்வே அமைச்சர், நான் 1000 மைல் தாண்டி இருக்கிறேன். என்னாலெல்லாம் போக முடியாது என்று பதில் சொல்வாராம். மங்குனியும் கேட்டுக் கொண்டு அமைதியாக, நான் வாத்து கிடையாது என்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பாராம்.

இதே அசாம் மாநிலத்தில் தான், நவம்பர் 2009-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. அப்போதும் பல மனித உயிர்கள் பறிபோயின. அப்போது, உள்துறை அமைச்சர் பறந்தோடி வந்து செய்தி வாசிப்பாளர் மாதிரி ஏதாவது அறிக்கை வாசித்தாரா? மங்குனி பிரதமரும், இத்தாலி அம்மையாரும், ஒபாமாவும் கண்டனம் தெரிவித்தார்களா?  மறு நாளே, பறந்து வந்து ஆறுதல் தான் சொன்னார்களா? இந்தியாவின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றெல்லாம் வீர வசனங்கள் வரவில்லையே?

அசாமும் இந்தியாவில் தானே இருக்கிறது? அவைகளும் விலைமதிக்க இயலாத மனித உயிர்கள் தானே?

ஏனென்றால், அசாமில் நடப்பது இந்திய அரசின் தீவிரவாதம். இந்திய அரசியல் வியாதிகளின் கோரமுகம்.   வெளி நாடுகளின் சதி என்று சொன்னால்தானே அரசியல் செய்ய முடியும். இந்த உள்நாட்டு பிரச்சனையில் கருத்து சொன்னால், தங்கள் முகத்திரை தானே கிழியும்.

இந்திய வியாபார ஊடகங்களுக்கும், மும்பையை பற்றி சொன்னால் தானே காசு பார்க்க முடியும். அசாமில் பழங்குடி மக்கள் செத்தாலென்ன,  உயிரோடு இருந்தாலென்ன. அசாம் குண்டுவெடிப்புகளெல்லாம், செய்திகளே இல்லாத போது, ஆவணப் படங்களில் ஓட்டிக் கொள்ளலாம் என்று இருந்திருப்பார்கள்

நாமும் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ள மாட்டோம்.  ஏனென்றால் ஊடகங்கள் தானே நம்மை இயக்குகின்றன. ஊடகங்களை இயக்குவது அரசியல்வியாதிகள். அவர்களுக்குத் தெரியும், மக்களுக்கு, எப்போது. எந்த செய்தியை கொடுக்கவேண்டுமென்று. எதை வைத்து அரசியல் செய்யலாம், ஒன்றை சொல்லி, மற்றொன்றை மறக்கடிப்பது இந்த வித்தைகளெல்லாம் ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நன்றாகவேத் தெரியும்.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் என்றவுடன் பொங்கி எழுந்து, உயிரிழப்புகளை காசாக்கும் நோக்கில் அடி தொண்டையில் கத்திய ஊடகங்கள், ஏன் கவுகாத்தி குண்டுவெடிப்புகளை பற்றி பேசுவதில்லை? நூற்றுக்கணக்கில் ரயில் விபத்துகளில் மாண்டு போகும் மக்களை பற்றி பேசுவதில்லை.

சமூக வலைத்தளங்களில், பொங்கி புரட்சி கோஷங்களை Status Message-களாக்கி, இறந்து போன அப்பாவி பொதுமக்களுக்காக கண்ணீர் கவிதை வடித்த தேசபக்தி ஆர்வலர்கள், அசாம் உட்பட வடகிழக்கில் நிகழும் எதையும் கண்டு கொள்வதில்லை. இவர்களிடம் கேளுங்கள், ஒற்றை வரியில் பதில் வரும், “I Hate Politics”.

எதை பேசவேண்டுமென்று, ஊடகங்களுக்கு ஆளும் அதிகாரவர்க்கத்தால் சொல்லப்பட்டிருக்கிறது. சமூகவலைத்தளங்களில்  நாமெல்லாம் பிரதிபலிப்பது ஊடகங்களின் மாய வார்த்தைகளைத்தான்.

இதில் பிரச்சனை என்னவென்றால், ஊரே ஒன்றை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, நாம் வேறெதையும் பற்றிப் பேசக்கூடாது. பேசிவிட்டால், அவ்வளவு தான், இங்கே உயிர்கள் மாண்டு கொண்டிருக்கிறது. நீ என்னவென்றால் பிடில் வாசிக்கிறாயே? நியாயமா, நீ மனிதன் தானா? உனக்குள் இரக்கம் இருக்கிறதா? கருணை உள்ளவன் தானா நீ என்று அடுக்கடுக்காக வசை மொழிகளை பாடிவிடுவார்கள்.

தெற்காசியாவின் நாட்டாமைப் பதவிக்கு அடித்து கொள்ளும் அமெரிக்கா, சீனா, இந்தியாவின் அதிகார, ஆயுத போட்டியே இந்த தாக்குதல்கள் என்கிற உலக அரசியல் அறியாமல், மாத சம்பளத்தில் குடும்பம் நடத்தும் அல்லது அன்றாடம் காய்ச்சி பிழைக்கும் வர்க்கம், எதையும் செய்யக் கூடாது. அவனுக்கு பிடித்ததை, அவனை மகிழ்விக்கிற எதையுமே அவன் நாடக்கூடாது.

அவனுக்கு உலக அரசியலும், குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தால் அதற்க்காக துக்கம் அனுசரிக்கிற மனோபாவமும் இருக்கவேண்டும். இல்லையென்றால் நீ, மனிதனில்லை, என்று ஏச்சுக்கள் வந்து சேர வேண்டும்.

உள்துறை அமைச்சர் செட்டி நாடு சமையலை ஒரு பிடி பிடித்துவிட்டு, சப்பாத்தி போல முகத்தை வைத்துக் கொண்டு, ”தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்” என்று வசனம் பேசியிருக்கலாம். விளம்பர இடைவெளிகளில் பர்காதத், பாதாம் கீர் சாப்பிட்டிருக்கலாம். ராஜ்தீப், ரசகுல்லா சாப்பிட்டிருக்கலாம். சாமானியன், இது எதையுமே செய்யக் கூடாது. அங்கே ஆயிரம் உயிர்கள் சோகத்திலிருக்கிறது. ”நீ, எப்படி இங்கே, இனிப்புகள் சாப்பிடலாம். கூடவே கூடாது.” என்று கேள்வி கேட்பார்கள்.

மும்பை தாக்குதலுக்குப் பின், அன்றிரவு நடந்து கொண்டிருந்த படப்பிடிப்புகள் ஒன்று கூட நிறுத்தப்படவில்லையாம். திரையரங்குகள் வழக்கம் போல இயங்கினவாம். இவ்வளவு ஏன், அகர்வால் கடைகளில் இனிப்புகள் வழக்கம் போல விற்கபட்டனவாம். ஆனால், தமிழ் நாட்டில், தமிழன் இனிப்பு சாப்பிடக் கூடாது. மனித உயிர்கள் போய்விட்டனவே, சக மனிதன் தானே, நீதான் துக்கம் அனுசரிக்கவேண்டும்.

இந்திய உளவுத்துறையின் தோல்விக்கும், அரசியல் வியாதிகளின் கையாலாகத்தனத்திற்க்கும் பொது மக்கள்தான் முழுப்பொறுப்பு. அதனால், நாம்தான் மூன்று வாரங்கள் துக்கம் அனுஷ்டிக்கவேண்டும். இனிய வார்த்தை, இனிப்புகள் எதையுமே நினைத்துக் கூடப்பார்க்கக் கூடாது. அசாமில் செத்ததற்க்கு கவலைப் படவேண்டாம். நம்மை, நாமே எவ்வளவு வேண்டுமானாலும் கொல்லலாம். கவலைப்படாதே….. ஆனால், குண்டு மும்பையிலும், டெல்லியிலும் மட்டும் வெடிக்கக் கூடாது. வெடித்தால், ஊடகங்களோடு நாங்களும் சேர்ந்து மனிதாபினத்தை வளர்ப்போம், அதற்கு அசாமியும், தமிழனும் துக்கம் அனுசரிக்கவேண்டும்.

 

பதிவர் புதசெவி (TBCD) FaceBook-ல் பகிர்ந்தது

உள்ளமை (அ) நிதர்சனம் (அ) யதார்த்தம்

மும்பையில் குண்டு வெடிப்பு என்று சொன்னேன்..எந்த இடம் என்று கேட்டாள் மனைவி. இடம் சொன்னவுடன்....எத்தனை சப்பாத்தி வேண்டும் என்று கேட்கிறாள்..இத்தனைக்கும் மச்சான் மும்பையில் இருக்கிறான்.

தம்பி வேலை செய்யும் இடத்தில் வெடிக்கலை என்றவுடன் கவனம் சப்பாத்திக்கு தாவிவிட்டது...

TED தமிழில்

 

வணக்கம் நண்பர்களே,

மீண்டும் ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் இந்தப் பதிவு எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி!

TED.com குறித்து நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். TED என்பது TECHNOLOGY ENTERTAINMENT AND DESIGN என்ற விரிவின் சுருக்கம். இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த பதிவை படியுங்கள்.

சில தினங்களுக்குமுன், சந்திரயான் விஞ்ஞானி, மயில்சாமி அண்ணாதுரை, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு TED காணொளியை இணைத்திருந்தார். அந்த காணொளி கண்டவுடன், அளவில்லாத ஆனந்தமடைந்தேன். 

அந்த கணொளியின் உரையாடல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தாலும், துணை உரைகள் (subtitle) மற்றும் விளக்கவுரைகள் அழகு தமிழில் தெளிவாக இருந்தன. எனக்கு ஒரளவுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும்,  தாய் மொழியில், எனக்கு ஏற்றவாறு விளக்கபட்டிருந்தது, மிகுந்த மகிழ்வை கொடுத்தது.

உதாரணத்திற்க்கு,

கிரகாம் ஹில்: நான் ஏன் வார நாள் சைவ உணவாளன் ஆனேன்?

 

தமிழ் TED காணொளிகளை மேலும் தேடியபோது, மிகுந்த வருத்ததிற்க்கு ஆளானேன். வெறும் 33 மூன்று காணொளிகளே, தமிழில் மொழி பெயர்க்க பட்டுள்ளன்.

6000 தமிழ் வலைபதிவர்கள், தமிழ் ட்வீட்டர்கள், 2 கோடி தமிழ் இணைய பயனார்கள் உள்ள ஒரு செம்மொழியான தமிழ் மொழியில் வெறும் 33 காணொளிகளே உள்ளது சோகத்தை ஏற்படுத்தியது.

6000 வலைப்பதிவுகள் இயங்கும் ஒரு மொழியில் 18 மொழிபெயர்ப்பாளர்களே உள்ளது மிகவும் வேதனை.

இன்னும் 700-க்கும் மேற்பட்ட காணொளிகள் தமிழ் மொழிபெயர்ப்புக்காக காத்திருக்கின்றன.

ஒவ்வொரு காணொளியும் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே. தமிழ் வலைப்பதிவர்கள் 100 பேர், ஒரு மாதம் ஒன்று சேர்ந்தால் போதும், ஏராளமான காணொளிகளை மொழிபெயர்த்துவிட முடியும். கணொளிகளை மொழிபெயர்க்க இலகுவான வழிமுறைகளையே கொடுத்துள்ளார்கள். நீங்கள் மொழி பெயர்க்கும் ஒவ்வொரு கணொளியையும், மற்றொருவர், சரிபார்த்து திருத்தம் செய்வார்.

உங்களுக்கு பிடித்தமான பேச்சாளர், தலைப்புகளை தேர்ந்தெடுத்து, உங்களுக்கு வேண்டியபடி மொழிபெயர்க்க முடியும்.

image 

உங்களுக்கு ஆங்கிலம், தமிழ் இரண்டும் தெரிந்திருந்தால், தயவு செய்து, ஒரு கணொளியையேனும் மொழி பெயர்க்க வேண்டிகிறேன். உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களுக்கு இதுபற்றிய செய்தியை சொல்லி, மொழிபெயர்க்க செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்களை மொழிபெயர்ப்பாளர்களாக TED-ல் இணைத்துக் கொள்ள, இங்கெ சுட்டுங்கள்.

தமிழ் துணைஉரை சேர்ப்புக்காக காத்திருக்கும் TED காணொளிகள்

TED குறித்து பதிவர் கே.ர்.பி. செந்தில் எழுதிய வலைப் பதிவு

இந்த முயற்சியின் மூலம் ஒரு 10 கணொளிகள், தமிழில் துணை உரை கிடைக்கபெற்றால், செம்மொழி செழித்து வளரும்.

ரஜினியை வாழ்த்துவதால் மானம் போய்விடுமா?

 

நம்மாளுங்களை 2 வகையா பிரிக்கலாம்.. தமிழினம்தான் எல்லாத்துலயும் சிறந்ததுன்னு சொல்லிட்டே இருக்கிற தற்பெருமை உள்ளவர்கள்..  நம்மளை  நாமளே கேவலபடுத்திக்கிற, தாழ்த்திக்கிற தாழ்வு மனப்பான்மை உள்ளவங்க...

பெரும்பாலும், எல்லாரிடம் இந்த இருவேறு குணங்கள் பச்சோந்தி மாதிரி, இடத்திற்க்கு தகுந்தார் போல், நேரத்துக்கு தகுந்தார் போல் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். அதே மாதிரி சில குறிப்பிட்ட நிகழ்வுகளை, நமக்கு நாமே கேவலமானது எனக்கூறி கூனிக்குறுகுவது.

திரைக் கதாநாயகர்களுக்காக, காவடி எடுப்பது, அலகு குத்துவது போன்ற எல்லா மூடத்தனங்களும்  உலகமெங்கும் உண்டு... வட இந்தியர்கள், அரேபியர்கள், வெள்ளையர்கள் என எல்லாரும் இதை செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்... ஆனால் அவற்றின் வடிவங்கள் வேறு...

அமிதாப் மருத்துவனையில், அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட போது, மும்பை சித்தி விநாயகர் கோவில் உட்பட, வட இந்தியாவில் பல இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.. சஞ்சய்தத் சிறையில் அடைக்கபட்ட போது, உண்ணாவிரதம் இருந்து பாத யாத்திரை செய்தவர்கள் பலர்... மாதுரியை வரைந்த ஹுசைன், மர்லின் மன்றோ உடையை பல கோடிகளுக்கு ஏலம் எடுத்த தொழிலதிபர்,  என பல வடிவங்களில் எல்லா மூடத்தனங்களும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன..

உலகத்தில் உள்ள எந்த நடிகர்களுக்கும் பேஸ்புக், ட்வீட்டர், ப்ளாக்கர், போன்றவற்றில் வாழ்த்து செய்திகள் சொல்லப்படுவதே இல்லையா?

ஆஜ் தக், ஸ்டார் ப்ளஸ் போன்ற சேனல்கள் பார்த்தால் மும்பையைத் தாண்டி வட இந்தியாவின் மற்ற ஊர்களில் என்ன நடக்கிறது என்று தெரியும். திரைப்பட நடிகர்களின் சொந்த விஷயங்களை மட்டுமே பல மணி நேரத்துக்கு செய்தியாக சொல்லும் ஒரு சில அலைவரிசைகள் இருக்கிறது என்றால் வட இந்தியர்கள் எப்படி தமிழனின் ரசனையை கிண்டலடிக்கலாம்?. அதற்க்கு நம்மவர்களும் எப்படி ஒத்து ஊதலாம்? வாரமலரில் மட்டும்தான் துணுக்குமுட்டை வருகிறதா, டைம்ஸ் ஆப் இந்தியாவில் வருவதில்லையா?

ராகுல் காந்தியின் புகைப்படம், பால்பேடா படையலையும், வாஜ்பாயின் புகைப்படம், லட்டு படையலையும், ஏற்றுக் கொள்ளும் என்றால், ரஜினியின் கட் அவுட் பாலாபிஷேகத்தையும் ஏற்றுக் கொள்ளும்.

மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாளில், மர்லின் மன்றோ பிறந்த நாளில் மெழுகுவர்த்தி ஏந்தி பொது இடங்களில் கூடி, பிரார்த்தனை செய்வது கூட மூட நம்பிக்கைதான்.

வெள்ளைக்காரன் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் போற மாதிரி, தமிழ்நாட்டுக்காரன் காவடி எடுத்துட்டு ஊர்வலம் போறான். வடிவம்தான் மாறுகிறதே ஒழிய, எல்லாமே மூட நம்பிக்கைகள்தான். மடத்தனம் தான்.

மைக்கேல் ஜாக்சன் மட்டுமின்றி, வில் ஸ்மித், ஜாக்கிசான், புருஸ்லி, அர்னால்டு, ஜெனிபர் லோபஸ், மர்லின் மன்றோ, ஜூலியா ராபர்ட்ஸ் போன்ற பல நடிகர்களின் டி ஷர்டுகள், அவர்களின் திரைப்பட ஸ்டில்கள், ஸ்டைல்கள் எல்லாவற்றையும் வெள்ளையர்கள், அரேபியர்கள் பலர் பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன்...

அர்னால்டு, ஜாக்கிசான், ஜாக்சன் எல்லோருமெ ஒவ்வொரு துறையிலும் தனித்திறமை படைத்தவர்கள். ஒத்துக் கொள்கிறேன். அதே போல ரஜினிக்கும் சில திறமைகள் உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். அவருக்கு எந்த திறமையும் இல்லை என்று   நீங்கள் சொன்னால், இத்தோடு பதிவை மூடிவிட்டு, வேறு வேலையை பாருங்கள்.

அர்னால்டு படம் போட்ட டிஷர்ட் போட்டா படிச்ச மேதாவி, ரஜினி படம் போட்ட டிஷர்ட் போட்டா உங்களுக்கு பட்டி காட்டான்.. முட்டாப் பய.... 

ஜாக்கிசான், புருஸ்லீ, ஜாக்சன் படம் போட்ட டிஷர்ட்களை அவர்கள் போட்டுக் கொண்டு வந்தால், பாராட்டுவீர்களா?  ”பட்டிகாட்டானுக்கு பொழப்ப பார்த்தியா, ஜாக்சன் டிஷர்ட்டு! என்று கிண்டலடிப்பீர்கள்!

வெள்ளையர்கள், அரேபியர்கள், வட இந்தியர்கள்,  ஹாலிவுட், பாலிவுட் நட்சித்திரங்கள் படம் போட்ட டி-ஷர்ட் போடவே மாட்டார்களா?

டி காப்ரியோ வந்தால் அவர்கள் கூடி, ரோடு ப்ளாக் ஆகும். மோகன்லால் வந்தால் நம்மவர்கள் கூடி ரோடு ப்ளாக் ஆகும். (சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த்து).  இரண்டுமே கேவலமில்லை. அவரவர்களுக்கு பிடித்தத, அவரவர்கள் செய்கிறார்கள்.

காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்பவர்கள், விழிப்புணர்வு இல்லாதவர்கள்.. படிப்பறிவு இல்லாதவர்கள், வியாபார நிறுவனங்களால் ஆட்டுவிக்கபடுகிறவர்கள்.. போலியான விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டவர்கள். தன்னிலை மறந்து போலி புகழுக்குப் பின்னால் அலைந்து திரியும் சாதாரண மனிதர்கள்.  திரைப்பட நாயகன் என்பதையும் தாண்டி, அவனை தலைவனாக ஏற்றுக் கொள்ள செய்தது சுயநலம் மிகுந்த வியாபாரிகள், அரசியல்வாதிகள்.

மன்மோகன் உலகிலேயே அதிகம் படித்த மேதைதான்... நடப்பது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, அமைதியாகத்தான் இருக்க முடிகிறதே தவிர, அவரின் பெயரால், அவரின் தலைமையின் கீழ் நடைபெறும் அரசின் தவறுகளை தடுக்க இயலாது. அதே போல, ரஜினியே நினைத்தாலும் சில விஷயங்களை தடுக்க இயலாது. அவரே நினைத்தாலும் அதிலிருந்து வெளிவருவதென்பது இயலாத காரியம்.

ஹாலிவுட்டில் செய்யாத எந்த பறக்கும் வித்தையையும், விஜய்யும், தனுஷும் செய்வதில்லை.  ஹாலிவுட்டில் எவ்வளவு பூ சுத்தினாலும் பார்க்க்கும் அறிவுஜீவிகள், தமிழ் படத்தில் மட்டும் லாஜிக் பேசுவார்கள்.

சில விஷயங்களை குறை சொல்லுவதை விட்டுவிட்டு  நிதர்சனத்தை புரிந்து கொண்டு, வெறுப்பை உமிழாதீர்கள்.

பின்குறிப்பு : இப்பதிவு பாலேபிஷேகம், காவடி எடுத்தல், மண் சோறு சாப்பிடுதல் போன்ற மூட நம்பிக்கைகளை ஆதரித்து எழுதப்பட்ட பதிவு அல்ல. வட இந்தியன் கிண்டலடிக்கிறான்.. வெள்ளைக்காரன் சிரிக்கிறான். மலையாளி  நக்கல் பண்றான் என்று பொருமுபவர்களுக்காக எழுதப்பட்ட பதிவு.

இந்திய முடியரசு

 

சுதந்திரத்திற்க்கு முன்னால், இந்தியா பிரிட்டிஷ் ராஜ பரம்பரையின் கட்டுபாட்டில் இருந்தது. கிழக்கிந்திய கம்பெனிக்கு முன்னால், முகலாய அரசர் நாட்டை ஆண்டு வந்தார்கள். பல்வேறு பகுதிகளை குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். ஒரே பரம்பரையின் வாரிசுகள் ஆட்சியில் இருந்ததுடன்,  மன்னர் குடும்ப உறவினர்கள், மன்னர் குடும்ப விசுவாசிகளையே முக்கிய பதவிகளில்  நியமித்து, ஆட்சிக்கு எந்த பிரச்சனையையும் வராமல் பார்த்துக் கொண்டார்கள். இவையெல்லாம் நாம் பள்ளி பாடப்புத்தகத்தில் படித்தவைகள். அதோடு, இந்தியாவில் நடைபெறுவது மக்களாட்சி என்று சொல்லி, மக்களால், மக்களுக்காக நடத்துபடும் அரசு என 2 மதிப்பெண் வினாவில் கேட்பார்கள்.

முடியாட்சிக்கும், குடியாட்சிக்கும் முக்கய வேறுபாடாக குறிப்பிடப்படுவது, ஆட்சியின் அதிகாரவர்க்கத்தினை மக்கள் நிர்ணயிக்கலாம் என்பது மட்டும்தான். இன்றைய இந்தியா குடியரசுவாக அறிவிக்க பட்டு, 60 ஆண்டுகளை நிறைவுசெய்துவிட்டோம்.  இன்றைக்கும், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவருகின்றன. ஒவ்வொரு அமைச்சரும் தங்களை ஒரு குறுநில மன்னராகவே நினைத்துக் கொண்டு, தங்கள் பகுதிகளில், தங்கள் துறைகளில் அதிகாரத்தை பறக்கவிடுகின்றனர்.

மத்திய ஆட்சியை பொறுத்தவரை, நேரு குடும்பத்திற்க்கு இன்னும் 100 ஆண்டுகளுக்கு எழுதி கொடுத்தாகிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் கடைக்கோடி குடிமகன், பிரியங்காவின் மகனுக்கு கொடி பிடிக்க இப்போதே தயாராகி விட்டான். ஜவகர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு, மனைவி கமலா நேரு இவர்கள் இருவரையும் தவிர்த்து பார்த்தால், நேரு குடும்பத்தில் மட்டும் 17 நபர்கள் சுதந்திர இந்தியாவின் அரசியல் அதிகாரங்களில் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.

இந்திரா காந்தி, ஃப்ரோஸ் காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா, மேனகா காந்தி, வருண் காந்தி என ஒட்டுமொத்த நேரு குடும்பங்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. நேரு குடும்ப அடிவருடிகள் நாட்டின் ஆட்சி அதிகாரங்களில் அமர்ந்து ஊழலில் திளைக்கின்றனர். மக்களாட்சியின் மாண்புகள் காற்றில் பறக்கவிடப்பட்டு, ஊடகங்களும், நேரு குடும்ப அடிமைகளாகிவிட்டனர்.

மத்திய அரசில்தான் இந்த நிலை என்றால், மாநிலங்களிலோ குறுநில மன்னர்களின் குடும்பங்கள் செய்யும் அக்கிரமங்கள் கணக்கிலடங்காதவை.  மாநிலத்திற்க்கு ஒரு கட்சியை ஏற்படுத்தி, தங்கள் குடும்ப உறுப்பினர்களை எல்லா பதவிகளிலும் உட்கார வைத்து, மக்களின் வரிப்பணத்தை குவித்துவிடுகின்றனர். தமிழ்நாடு உட்பட  இந்தியாவின் 11 மாநிலங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகாரத்தில் உள்ளனர்.

ஆந்திரா – N.T.ராமாராவ் குடும்பத்தினர், Y.S.ராஜசேகர ரெட்டி குடும்பத்தினர்

பீகார் – அனுராக் நாராயணன் குடும்பத்தினர், லாலுபிரசாத் யாதவ் குடும்பத்தினர், லலித்  நாராயணன் மிஷ்ரா குடும்பத்தினர்

பஞ்சாப் – பிரதாப் சிங் கைரோன் குடும்பத்தினர், ஆச்சார் சிங் சிங்கால் குடும்பத்தினர்

காஷ்மீர் – ஷேக் அப்துல்லா குடும்பத்தினர், குலாம் முகமது ஷா குடும்பத்தினர், முப்தி முகமது சயீத் குடும்பத்தினர்

மகாராஷ்டிரா – பால் தாக்கரே குடும்பத்தினர், சரத் பவார் குடும்பத்தினர், கணேஷ் நாயக் குடும்பத்தினர்

உத்திரப் பிரதேசம் – சவுத்ரி சரண் சிங்(முன்னாள் பிரதமர்) குடும்பத்தினர்

கேரளா – கருணாகரன் குடும்பத்தினர்

ராஜஸ்தான் – பல்தேவ் ராம் மிர்தா குடும்பத்தினர்

மத்தியப் பிரதேசம் – விஜயராஜீ சிந்தியா (ராஜ பரம்பரை) குடும்பத்தினர்

ஹரியாணா – ரண்பீர் சிங் கூடா குடும்பத்தினர்

ஒரிஸ்ஸா – பிஜூ பட்நாயக் குடும்பத்தினர்

இதில் தமிழ்நாட்டை தேடாதீர்கள். நமது கதை ஊருக்கு வெளிச்சம். வட  இந்திய ஊடகங்கள் ஒவ்வொரு முறையும் கருணாநிதி குடும்ப வரைபடம் இல்லாமல் நிகழ்ச்சியை தொடங்குவதே இல்லை. மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு குடும்பத்திற்க்கும், மிகப் பெரிய வரைபடம் உண்டு. முழு விபரத்திற்க்கு சுட்டி

ஒவ்வொருவரின் குடும்பத்திலிருந்தும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் முதலமைச்சர், அமைச்சர், சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.  காங்கிரஸ் மட்டுமன்றி பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம், இவ்வளவு ஏன் இடதுசாரி கட்சிகளிலும் தஞ்சம் அடைந்து ஒரே குடும்பம் வழிவழியாக அதிகாரங்களை அனுபவித்து, மக்களை சுரண்டி வருகிறார்கள்.

தேர்தலில் யார் நிற்கவேண்டும், யார் அமைச்சராக வேண்டும், யார் எந்த துறை என்று நிர்ணயிப்பது எல்லாமே இந்த சில குடும்பங்கள்தான்.  நீங்களும், நானும் வாக்களித்தால் இவர்களில் யாரேனும் ஒருவருக்குத் தான் வாக்களிக்க வேண்டும்.

ஒரு சில குடும்பங்களால், குடும்ப உறுப்பினர்களுக்காக   நடத்தப்படும் குடும்ப குறுநில மன்னர்களின் ஆட்சியே இங்கு நடைபெற்று வருகிறது!

இப்போது சொல்லுங்கள் இந்தியா குடியரசுவா, முடியரசா?

(நன்றி  விக்கிப்பீடியா

http://en.wikipedia.org/wiki/Political_families_of_India

http://en.wikipedia.org/wiki/Nehru-Gandhi_family

சுயவிளம்பர மோகம்

 

வணக்கம் நண்பர்களே,

இரண்டு மாதங்களுக்கு முன், விடுமுறையில் இந்தியா சென்றிருந்தபோது, பல உறவினர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டியிருந்ததால், நிறைய சன்னலோர பேருந்து பயணம். சுகமானதாகத் தான் இருந்தது. ஆனால் இரண்டு விஷயங்கள் ஒருவித பீதியையும், மன வேதனையையும் கொடுத்தது. அதில் முதல் விஷயம் பற்றிய பதிவுதான் இது….

அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரை நட்சித்திரங்களுக்கு போட்டியாக வெகுமானப்பட்ட நம்ம பொதுஜனமும் புகழுக்காக விளம்பரம் யுத்தத்தில் குதித்துவிட்டதை நினைத்து புளகாங்கிதம் அடைந்தேன்.

தமிழகத்தில், தொண்ணூறுகளின் இறுதிவரை திரைப்பட சுவரொட்டிகள் தவிர, தனியார் நிறுவனங்களின் விளம்பர சுவரொட்டிகளை மட்டுமே காண இயலும். அது போக திரைப்பட நடிகர்களின் ரசிகர் பெருமக்கள், தங்கள் கதாநாயகனின் புதுப் படத்தைப் பற்றி சுவர்களில் எழுதிவைப்பார்கள். தேர்தல் வரும் போது அந்த சுவர்களையெல்லாம் (அனுமதியின்றியே) அரசியல் கட்சிகள் ஒட்டு மொத்த குத்தகை எடுத்துவிடும்.

”விளம்பரம் செய்யாதீர்” என்று எழுதிவைத்தாலும், அறிவிப்பை மட்டும் விட்டுவிட்டு, சுற்றி விளம்பரம் எழுதிவைப்பார்கள். துணியால் அல்லது ஸ்கீரின் பிரிண்டிங் முறையில் எழுதப்பட்ட பேனர்களை விழாக்காலங்களில் பார்க்கலாம். ரசிக கண்மணிகளால் வைக்கப்படும் பேனர்கள்/கட் அவுட்கள், திரையரங்குகள் இருக்கும் பகுதிகளில் மட்டுமே காணக் கிடைக்கும். தனியார் வர்த்தக  நிறுவனங்களால் வைக்கப்படும் விளம்பர தட்டிகள் விழாக்காலங்கள் அல்லது ஆடி தள்ளுபடி நாட்களில் மட்டுமே இருக்கும். இவை தவிர, நெடுஞ்சாலைகளில், ஊருக்கு வெளியில் தகரத்தில் செய்யப்பட்ட மெகா வடிவ விளம்பரங்களை வைத்திருப்பார்கள்.

பள்ளி விடுமுறையில், முதன்முறையாக சென்னை வந்தபோது, சாதாரண நாட்களில் கூட மெகா விளம்பரங்களை பார்த்து வியந்திருக்கிறேன். குறிப்பாக அண்ணா மேம்பாலத்தை சுற்றிலும் இருந்த தனியார் நிறுவனங்களின் விளம்பர தட்டிகள் மற்றும் திரைப்பட விளம்பரங்களை வாய் பிளந்து ரசித்திருக்கிறேன். ஒரு வழியாக சென்னை உயர்நீதிமன்றம்  கடிவாளம் போட்டு, மழைக்காலத்தில் சாலையில் பயணிப்பவர்களின் வயிற்றில் பால் வார்த்தது.

ஆனால், இன்றோ எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் தயவினால் ப்ளக்ஸ் பேனர்கள். ஒவ்வொரு பேருந்து நிறுத்தம், முச்சந்திகள், நாற்சந்திகள், கோவில் வாசலகள் என எங்கெங்கிலும் அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள், தனியார் நிறுவனங்களையே மிஞ்சும் அளவுக்கு சாதாரண பாமரனின் விளம்பரங்கள்.

திருமண விழா, புது மனை புகுவிழா, பேரன்/பேத்திகளின் காதுகுத்துவிழா, இவ்வளவு ஏன் மஞ்சள் நீராட்டுவிழாவுக்கு கூட ஒட்டு மொத்த குடும்பத்தினரின் புகைப்படங்களோடு வாழ்த்தி ப்ளக்ஸ் பேனர்கள். ”வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்” என 20 பேரின் புகைப்படங்கள் அலைபேசி சகிதம், குறிப்பாக அடைமொழிகளோடு. மணமகன் அல்லது மணமகள் அலைபேசியை வைத்துகொண்டு, விதவிதமான வடிவங்களில் மெகா அளவு விளம்பரங்கள். 

திருவாரூர்-மயிலாடுதுறை சாலையிலுள்ள கொல்லுமாங்குடி பேருந்து நிறுத்தத்தில் ஒரு பேனர் பார்த்து மயக்கம் போட்டு விழாத குறை. மணமகன், மணமகளுக்கு தாலி (சங்கிலி போன்ற) கட்டுவது போன்ற மிகப் பெரிய விளம்பரம். வழக்கம் போல வாழ்த்திய மணமகனின் நண்பர் வட்டாரம். சரி திருமணம் முடிந்துவிட்டது என நினைத்து தேதியை பார்த்தால், நான் பார்த்த நாளுக்கு, அடுத்த நாள்தான் திருமணம்.  நிச்சயமாக அந்த விளம்பரம், 5 நாட்களுக்கு முன்பாக அங்கே வைக்கப் பட்டிருக்க வேண்டும். 10 நாளைக்கு முன்பாக புகைப்படம் எடுத்திருப்பார்கள். ஒரு வேளை அந்த திருமணம் நடைபெறாவிட்டால் மணமக்களின் கதி???

அதைவிட மற்றுமொரு கொடுமையை மயிலாடுதுறைக்கருகே பார்க்க நேர்ந்தது. ”அம்மனுக்கு காவடி எடுக்கும் அன்பு உள்ளங்களை வாழ்த்துகிறோம்” என்றொரு ப்ளகஸ் பேனர். ஒவ்வொரு குழந்தையும் சிரித்த முகத்தோடு கையில் காவடிகளை வைத்து போஸ் கொடுத்து கொண்டிருந்தார்கள். காவடி விழா, ஒரு வாரம் கழித்தே நடைபெற இருப்பதாக விளம்பரம் சொல்லியது. தாத்தா, பாட்டி, மாமா, அத்தைகள் என்று ஒரு பெரிய குடும்பமே மகழ்ச்சியாக சிரித்து கொண்டிருந்தார்கள். என்ன கொடுமையென்று இதை சொல்வது. இறைவனுக்கு செய்யும் நேர்த்திக் கடனுக்குமா விளம்பரம்?

கொட்டிய மழைக்காக ATM மையத்தில் ஒதுங்கி நின்றிருந்த நான் திருவாரூரில் கண்ணெதிரே கண்ட காட்சி.   இரவு 9 மணிக்கு, முக்கிய சாலையான பனகல் சாலையில் அந்த   மெகா விளம்பர தட்டி,  கொட்டிய மழையில் விழுந்துவிட்டது. அதை சரி செய்த போக்குவரத்து காவலர் செய்த வசவுகள் அந்த குடும்பத்தின் ஏழேழு தலைமுறையையும் சென்றடையும். விளமபரத்தில் இருந்த மணமக்களை மட்டுமல்லாமல், அதை ப்ரிண்ட் செய்த விளம்பர நிறுவனம், அனுமதியளித்த காவல்துறை உயரதிகாரிகள் என அனைவரையும் கொச்சையாக திட்டிக் கொண்டிருந்தார். அவர்களின் வாழ்த்துக்கள் விரயமானதோடு, பணமும் விரயமானதுதான் மிச்சம்!

இது போதாதென்று, உள்ளூர் தனியார் அலைவரிசைகளில்( Local Cable TV Channels) , எல்லாவற்றிற்க்கும் வாழ்த்து சொல்லி 5 முதல் 10 நிமிடம் வரை விளம்பரங்கள். ஒவ்வொருவரின் உறவுமுறைகளோடு, பல்வேறுவித அடைமொழிகளோடு, குடும்பத்தினரின் ஒட்டு மொத்த புகைப்படங்கள்.  ஒரு குடும்ப விழாவுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை அழைப்பிதழ் கொடுத்து அழைப்பது நமது மரபு. பிறகு இந்த விளம்பர தட்டிகளை வைத்து யாருக்காக தம்பட்டம் அடிக்கீறிர்கள்?  யாருடைய மனம குளிர தங்கள் வாழ்த்துக்களை ஊருக்கே அறிவிக்கிறார்கள்? இதைப் பார்த்து வெறுப்படைந்து என் போன்றவர்கள் சாபம் விட்டால் அது யாரை சென்றடையும்?

விளம்பர தட்டிகளை 5 நாட்களுக்குள் எடுக்க வேண்டுமென்று சட்டத்தை பெரு நகரங்களில் மட்டுமே செயல்படுத்த முடியும். சிறிய ஊர்கள், குறிப்பாக ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் இருக்கும் தனியொரு மனிதனின் ஒராயிரம் விளம்பரங்களுக்கு யார் கடிவாளம் போடுவது? அதன் கீழ் மழைக்கு ஒதுங்கி நிற்க்கும் பொதுஜனத்தின் உயிருக்கு யார் காப்பீடு தருவது?

அரசாங்கமா? அனுமதியளித்த காவல்துறை / நகராட்சி / ஊராட்சி துறையா? விளம்பரத்தை வைத்த நிறுவனம்? வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்? அல்லது அந்த மணமக்கள்? உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம்!