சுதந்திரத்திற்க்கு முன்னால், இந்தியா பிரிட்டிஷ் ராஜ பரம்பரையின் கட்டுபாட்டில் இருந்தது. கிழக்கிந்திய கம்பெனிக்கு முன்னால், முகலாய அரசர் நாட்டை ஆண்டு வந்தார்கள். பல்வேறு பகுதிகளை குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். ஒரே பரம்பரையின் வாரிசுகள் ஆட்சியில் இருந்ததுடன், மன்னர் குடும்ப உறவினர்கள், மன்னர் குடும்ப விசுவாசிகளையே முக்கிய பதவிகளில் நியமித்து, ஆட்சிக்கு எந்த பிரச்சனையையும் வராமல் பார்த்துக் கொண்டார்கள். இவையெல்லாம் நாம் பள்ளி பாடப்புத்தகத்தில் படித்தவைகள். அதோடு, இந்தியாவில் நடைபெறுவது மக்களாட்சி என்று சொல்லி, மக்களால், மக்களுக்காக நடத்துபடும் அரசு என 2 மதிப்பெண் வினாவில் கேட்பார்கள்.
முடியாட்சிக்கும், குடியாட்சிக்கும் முக்கய வேறுபாடாக குறிப்பிடப்படுவது, ஆட்சியின் அதிகாரவர்க்கத்தினை மக்கள் நிர்ணயிக்கலாம் என்பது மட்டும்தான். இன்றைய இந்தியா குடியரசுவாக அறிவிக்க பட்டு, 60 ஆண்டுகளை நிறைவுசெய்துவிட்டோம். இன்றைக்கும், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவருகின்றன. ஒவ்வொரு அமைச்சரும் தங்களை ஒரு குறுநில மன்னராகவே நினைத்துக் கொண்டு, தங்கள் பகுதிகளில், தங்கள் துறைகளில் அதிகாரத்தை பறக்கவிடுகின்றனர்.
மத்திய ஆட்சியை பொறுத்தவரை, நேரு குடும்பத்திற்க்கு இன்னும் 100 ஆண்டுகளுக்கு எழுதி கொடுத்தாகிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் கடைக்கோடி குடிமகன், பிரியங்காவின் மகனுக்கு கொடி பிடிக்க இப்போதே தயாராகி விட்டான். ஜவகர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு, மனைவி கமலா நேரு இவர்கள் இருவரையும் தவிர்த்து பார்த்தால், நேரு குடும்பத்தில் மட்டும் 17 நபர்கள் சுதந்திர இந்தியாவின் அரசியல் அதிகாரங்களில் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.
இந்திரா காந்தி, ஃப்ரோஸ் காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா, மேனகா காந்தி, வருண் காந்தி என ஒட்டுமொத்த நேரு குடும்பங்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. நேரு குடும்ப அடிவருடிகள் நாட்டின் ஆட்சி அதிகாரங்களில் அமர்ந்து ஊழலில் திளைக்கின்றனர். மக்களாட்சியின் மாண்புகள் காற்றில் பறக்கவிடப்பட்டு, ஊடகங்களும், நேரு குடும்ப அடிமைகளாகிவிட்டனர்.
மத்திய அரசில்தான் இந்த நிலை என்றால், மாநிலங்களிலோ குறுநில மன்னர்களின் குடும்பங்கள் செய்யும் அக்கிரமங்கள் கணக்கிலடங்காதவை. மாநிலத்திற்க்கு ஒரு கட்சியை ஏற்படுத்தி, தங்கள் குடும்ப உறுப்பினர்களை எல்லா பதவிகளிலும் உட்கார வைத்து, மக்களின் வரிப்பணத்தை குவித்துவிடுகின்றனர். தமிழ்நாடு உட்பட இந்தியாவின் 11 மாநிலங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகாரத்தில் உள்ளனர்.
ஆந்திரா – N.T.ராமாராவ் குடும்பத்தினர், Y.S.ராஜசேகர ரெட்டி குடும்பத்தினர்
பீகார் – அனுராக் நாராயணன் குடும்பத்தினர், லாலுபிரசாத் யாதவ் குடும்பத்தினர், லலித் நாராயணன் மிஷ்ரா குடும்பத்தினர்
பஞ்சாப் – பிரதாப் சிங் கைரோன் குடும்பத்தினர், ஆச்சார் சிங் சிங்கால் குடும்பத்தினர்
காஷ்மீர் – ஷேக் அப்துல்லா குடும்பத்தினர், குலாம் முகமது ஷா குடும்பத்தினர், முப்தி முகமது சயீத் குடும்பத்தினர்
மகாராஷ்டிரா – பால் தாக்கரே குடும்பத்தினர், சரத் பவார் குடும்பத்தினர், கணேஷ் நாயக் குடும்பத்தினர்
உத்திரப் பிரதேசம் – சவுத்ரி சரண் சிங்(முன்னாள் பிரதமர்) குடும்பத்தினர்
கேரளா – கருணாகரன் குடும்பத்தினர்
ராஜஸ்தான் – பல்தேவ் ராம் மிர்தா குடும்பத்தினர்
மத்தியப் பிரதேசம் – விஜயராஜீ சிந்தியா (ராஜ பரம்பரை) குடும்பத்தினர்
ஹரியாணா – ரண்பீர் சிங் கூடா குடும்பத்தினர்
ஒரிஸ்ஸா – பிஜூ பட்நாயக் குடும்பத்தினர்
இதில் தமிழ்நாட்டை தேடாதீர்கள். நமது கதை ஊருக்கு வெளிச்சம். வட இந்திய ஊடகங்கள் ஒவ்வொரு முறையும் கருணாநிதி குடும்ப வரைபடம் இல்லாமல் நிகழ்ச்சியை தொடங்குவதே இல்லை. மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு குடும்பத்திற்க்கும், மிகப் பெரிய வரைபடம் உண்டு. முழு விபரத்திற்க்கு சுட்டி
ஒவ்வொருவரின் குடும்பத்திலிருந்தும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் முதலமைச்சர், அமைச்சர், சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள். காங்கிரஸ் மட்டுமன்றி பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம், இவ்வளவு ஏன் இடதுசாரி கட்சிகளிலும் தஞ்சம் அடைந்து ஒரே குடும்பம் வழிவழியாக அதிகாரங்களை அனுபவித்து, மக்களை சுரண்டி வருகிறார்கள்.
தேர்தலில் யார் நிற்கவேண்டும், யார் அமைச்சராக வேண்டும், யார் எந்த துறை என்று நிர்ணயிப்பது எல்லாமே இந்த சில குடும்பங்கள்தான். நீங்களும், நானும் வாக்களித்தால் இவர்களில் யாரேனும் ஒருவருக்குத் தான் வாக்களிக்க வேண்டும்.
ஒரு சில குடும்பங்களால், குடும்ப உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் குடும்ப குறுநில மன்னர்களின் ஆட்சியே இங்கு நடைபெற்று வருகிறது!
இப்போது சொல்லுங்கள் இந்தியா குடியரசுவா, முடியரசா?
(நன்றி விக்கிப்பீடியா